இது எரிக்கமுடியாத நூலகம்

Published on Author Noolaham Foundation

(த சண்டே இந்தியன், 06 பெப்ரவரி 2011, பக்கம் 25)

சசீவன் கணேசானந்தன். இலங்கைத் தமிழ் பேசும் சமூஉகங்களின் எழுத்தாவணங்களை டிஜிட்டல் முறையில் இணையத்தில் ஆவணப்படுத்தும் ‘நூலகம்’ அறக்கட்டளையின் தலைமை நிர்வாக இயக்குநர். இந்த இணையத்தளத்தில் ஈழத்துத் தமிழ் நூல்களை இலவசமாகப் படிக்கலாம் என்பது சிறப்பம்சம். அவரிடம் பேசினோம்.

இலங்கைத் தமிழ்ச் சமூகம் என்பது ஏதோவொரு விதத்தில் சிக்கி சின்னாபின்னமாகியிருக்கிற ஒரு சமூகமாக இருக்கிறது. புவியியல் ரீதியாக ஒரே இடத்தில் வாழக்கூடிய சூழலின்றி, அது பரந்த வாழ்கிறது. சாதாரண ஒரு நூலகத்தை யாழ்ப்பாணத்தில் தொடங்கினால் பார்வையாளர்கள் என்பவர்கள் மட்டுப்படுத்தப்படுவார்கள். யாழ்ப்பாணத்தில் வசிப்பவர்கள் மட்டுமே அதைப் பயன்படுத்தக்கூடிய நிலைமை இருக்கும். இது இலண்டன், கனடா என எங்கே தொடங்கினாலும் அதுதான் நடக்கும்.

ஆனால் இணையப்பரப்பில் தொடங்கப்படும்போது, அதை எல்லா இடங்களிலும் எல்லோருமே பார்க்ககூடிய நிலைமை சாத்தியமாகும். அதுதான் அதன் முக்கிய நோக்கம். எமது வரலாறு, இலக்கியம், மொழி, பண்பாடு, சமயங்கள், கலைகள், நாட்டார் வழக்காறுகள் உள்ளிட்ட அனைத்தூம் ஆவணப்படுத்தப்படுகின்றன. அழியும் நிலையிலுள்ள எழுத்துக்கள், ஆவணங்கள் அடுத்த தலைமுறைகளுக்கும் கிடைக்கும் வண்ணம் www.noolaham.org என்ற எங்களுடைய டிஜிட்டல் நூலகத்தில் பாதுகாக்கப்படுகின்றன.

நூல்களை திரட்ட, ஒவ்வொருவிதமான கருவுக்கும் தனித்தனி கூகுள் குழாக்களை உருவாக்கி வைத்திருக்கின்றோம். இக்குழுக்களை ஒருங்கிணைப்பதில் சில இடர்ப்பாடுகள் இருக்கின்றன. அதை மீறித்தான் தொடர்ச்சியாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றோம். இதில் சவால் என்னவென்றால், எல்லோராலும் எல்லா நேரத்திலும் வேலை செய்யமுடியாது. அவரவர் தங்களுக்கு நேரம் கிடைக்கும் போதுதான் அந்தப் பணிகளைச் செய்வார்கள் என்பதுதான். இந்த நூலக வலைத்தளத்தில் நேரடியாக எழுத்து ஆவணங்கள் தொடர்பான தகவல்களைச் சரிபார்த்தும் இணைத்தும் தளத்தில் உள்ளடக்கத்தை விரிவாக்கலாம். இணையத்தில் கிடைக்கும் மின்னூல்களுக்கான புதிய விவரப் பக்கங்களைத் தொடங்கலாம். எங்களுக்கு உதவிய ஒருவருக்கு நேரமின்மை காரணமாகப் பங்களிப்பு குறையும் போது, வேறொருவர் வருவார். இப்படி புதியவர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள்.

கடந்த ஆறு ஆண்டுகளில் ஒரு செயல்திட்டமாகத் தொடங்கப்பட்டது நிறுவனமாக வளர்ந்துள்ளது. 2010 நவம்பர் வரையில் எட்டாயிரம் ஆவணங்களை ஆவணபடுத்தியிருக்கின்றோம். இது மிகப்பெரிய அடைவாக இருக்கிறது. அதற்கப்பால் இனி ஆண்டுக்கு 12 ஆயிரம் ஆவணங்கள் என்ற இலக்கை வைத்திருக்கின்றோம்.

இதில் பாடப்புத்தகங்களையும் கூட ஆவணப்படுத்துகிறோம். இணையத்தின் மூலமாக சகல பாடங்களையும் படிக்கக்கூடிய நிலைமை உருவாகும். டியூசன் கல்சர் பூதாகாரமாக வளர்ந்திருக்கிறது. அதை ஒழிக்க வேண்டிய தேவையிருக்கிறது. அதை ஒழிக்கும் போதூ சுயகல்வி என்பது வளரும். இதை ஊக்குவிக்க வேண்டிய தேவையும் ஈருக்கிறது.

இதற்கு பெரிய நிறுவனங்களிடமிருந்து எந்த நிதி இதவிகளையும் நாங்கள் பெற்றுக் கொள்ளவில்லை. தனிநபர்களிடமிருந்து கிடைக்கும் உதவிகளைத்தான் பெற்றுக் கொள்கிறோம். இதுவொரு தன்னார்வக் கூட்டுமுயற்சி என்பதால் ஆர்வமுள்ள எவரும் பங்குபெறலாம்.

1887 முதல் 2010 வரையிலான காலப்பகுதியில் வெளியான ஆவணங்கள் எங்களிடம் உள்ளன. இலங்கைத் தமிழ் அல்லாத வெளியீடுகளைக் கொண்டிருக்கும் ‘அயலகம்’ பகுதியில் ஏறத்தாழ 300 ஆவணங்கள் உள்ளன.

இப்போது தமிழர் வரலாறு தொடர்பான ஆவணங்களைத் தேடிக் கொண்டிருக்கிறோம். அவை யாரிடமாவது இருப்பின் கொடுத்து உதவலாம். இலவசமாக இணையத்தில் யார் வேண்டுமானாலும் அதைப்படிக்கும் விதத்தில் பதிவேற்றுவோம்.