ஈழத்து நூலகவியலின் வழிகாட்டி சிறீகாந்தலட்சுமி அருளானந்தம் அவர்களை இழந்தோம்

Published on Author Noolaham Foundation
சிறீகாந்தலட்சுமி அருளானந்தம்
சிறீகாந்தலட்சுமி அருளானந்தம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பிரதம நூலகராகவும் நமது நூலக நிறுவனத்தின் (Noolaham Foundation) ஒரு தன்னார்வப் பணிப்பாளராகவும் பங்காற்றிய சிறீகாந்தலட்சுமி அருளானந்தம் அவர்கள்  25 மார்கழி 2019 அன்று யாழ்ப்பாணத்தில் காலமானர் என்ற துயரச்செய்தியைப் பகிர்ந்து கொள்கின்றோம்.

நூல்கள், நூலகங்கள், நூலகவியல் துறையை நெருக்கமாக ஆழமாக நேசித்த, சிறீகாந்தலட்சுமி அருளானந்தம் அவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பிரதம நூலகரும் நூலக விழிப்புணர்வு நிறுவகத்தின் அமைப்பாளரும் (Founder, Foundation for Library Awareness) அறிதூண்டல் மையத்தின் இயக்குநரும் (Director, Knowledge Stimulation Center) இலங்கை நூலகச் சங்கத்தின் முன்னாள் தலைவரும் இலங்கைத் தேசிய நூலகம் மற்றும் தகவல் அறிவியல் கல்லூரியின் முகாமைத்துவச் சபை உறுப்பினரும் நூலக நிறுவனத்தின் ஆளுகைச் சபை உறுப்பினரும் ஆவார்.

ஈழத்து நூலகவியல் துறையில் நிகரற்ற ஆளுமையையும் பங்களிப்பையும் வழங்கி வந்த சிறீகாந்தலட்சுமி அருளானந்தம் அவர்களின் பிரிவு எம்மை ஆழ்ந்த துயரில் ஆழ்த்துகிறது. துயருறும் அவரது குடும்பத்தார், நண்பர்கள், மாணவர்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கல்களை பணிவுடன் முன்வைக்கிறோம்.

1961இல் இணுவிலில் பிறந்த சிறீகாந்தலட்சுமி அருளானந்தம் அவர்கள் சுன்னாகம் இராமநாதன் கல்லூரியின் பழைய மாணவி ஆவார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறையில் இளநிலைப் பட்டம் பெற்றார்.  பின்னர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நூலகம் மற்றும் தகவல் அறிவியலில் பட்டப் பின்பயிற்சி பட்டம் (Post Graduate Degree) பெற்றார். அதன் பின் அவர் ஆவணமாக்கம் மற்றும் தகவல் அறிவியலில் சிறப்புக் கவனம் செலுத்தி, இந்திய நூலகவியலின் தந்தை என அறியப்படும் இரா. அரங்கநாதன் அவர்கள் நிறுவிய ஆவணமாக்க ஆய்வு மற்றும் பயிற்சி நடுவத்தில் (Documentation Research and Training Centre) நூலகவியல் ஆய்வு சார் மேலதிக தகைமை பெற்றார். 1989இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் துணை நூலகராக இணைந்தார். 1995 இடம்பெயர்வின்போது வன்னிக்குச் சென்ற அவர் பெண்ணியம், ஈழப் போராட்டம், ஊடகவியல், இலக்கியம் சார்ந்த செயற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டார். 2002இற்குப் பின்னர் மீண்டும் யாழ்ப்பாணம் திரும்பிய அவர் 2008இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தற்காலிக நூலகர் ஆனார்.  2012இல் பிரதம நூலகர் ஆனார். 2017இல் இலங்கை நூலகச் சங்கத்தின் தலைவராகத் தெரிவானார். தமிழர் ஒருவர் இலங்கை நூலகச் சங்கத்தின் தலைவரானது இதுவே முதற்தடவை ஆகும்.

தமிழ் நூலகவியலைத் தெளிவாக வரையறுத்து வழிகாட்டும் நூல்களை அவர் வெளியிட்டமை அவரது மிக முக்கியமான பங்களிப்பு ஆகும். கலைக்களஞ்சியம் (Encyclopedia), கலைச்சொற்றொகுதி (Glossary), சொற்பொருளாய்வுக் களஞ்சியம் (Thesaurus) முதலான விடயப்பரப்புக்களையும் உள்ளடக்கி அவை அமைந்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. தூவியின் பகுப்பாக்கத்தையும் அவர் தமிழாக்கியுள்ளார்.

நூலகவியல் ஆய்விலும், கற்பித்தலிலும் முறையான பயிற்சியையும் ஆழ்ந்த அனுபவத்தையும் கொண்ட இவர் ஈழத்து தமிழ் நூலகவியல் துறையை உலகத் தரத்துக்கு உயர்த்தும் நோக்குடன் தனது வாழ்நாள் முழுதும் செயற்பட்டு வந்தார். மாணவர்களை பாடத்திட்டத்துக்கு அப்பால் சிந்திக்க, செயற்பட ஊக்கப்படுத்தினார்.

நூலகங்களை அவர் சமூக அறிவு வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்குமான முக்கிய கருவியாகக் கருதினார். நூலகங்களைக் கட்டியெழுப்பினால் மட்டும் பயனில்லை, அவை மக்களை முழுமையாகச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் வாசிப்பைத் தூண்டும் விழிப்புணர்வு ஊட்டலை அவர் தம் வாழ்வின் ஒரு முக்கிய இலக்காக வரித்துக் கொண்டார். “வளமான வாசிப்பு மானுடத்தின் மேம்பாடு” என்பது  அவர் முன்வைத்து செயற்பட்ட குறிக்கோள் வாசகம் ஆகும்.

சிறீகாந்தலட்சுமி அருளானந்தம் அவர்கள் இலங்கைத் தமிழரின் அறிவு வளங்களை ஆவணப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வந்த ஆவணப்படுத்துனர். தன் சொந்த வளங்களை எல்லாம் இப் பணியில் பயன்படுத்தி ஓர் அருமையான அரும்பொருட்கள் சேகரிப்பினை உருவாக்கியுள்ளார்.

நூலக நிறுவனத்தின் ஆரம்ப காலம் முதல் பங்களித்து வந்த இவர் நூலகச் சேகரங்களைப் பகுப்பாக்கம் செய்து ஒழுங்குபடுத்துவதில் முக்கிய பங்காற்றி வந்தார். அத்துடன் நூலக நிறுவனத்தின் ஆளுகைச் சபையில் செயற்பட்டதோடு அரிய ஆவணங்களை எண்ணிம ஆவணங்களாக்கும் பணியிலும் வழிகாட்டி வந்தார்.

நூலகர், எழுத்தாளர், ஆசிரியர், ஆய்வாளர், ஆவணப்படுத்துனர், செயற்பாட்டாளர் என்ற இணையற்ற ஒரு பன்முக ஆளுமையை ஈழத் தமிழ் பேசும் சமூகம் இழந்து தவிக்கிறது. உயர்ந்த இலட்சியங்களையும் எண்ணக் கருக்களையும் முன்நிறுத்தி, அவற்றை நோக்கி நித்தம் பயணித்த தன்னிகரற்ற ஆத்மா இன்று எம்மிடை இல்லை என்பதை எம்மால் நம்பமுடியவில்லை.  எம்மோடு பகிர்ந்து கொண்ட அவரின் பெரும் கனவுகள் எம் முன் நிற்கின்றன. அக் கனவுகள், செயற்திட்டங்கள் நோக்கி எம் பயணம் தொடரும் என்ற உறுதியினை நாம் அவருக்குச் சமர்ப்பிக்கின்றோம்.

ஆளுகைச் சபையினர், தன்னார்வலர்கள், பணியாளர்கள்
நூலக நிறுவனம்
25.12.2019