வணக்கம் சஞ்சிகையில் சேரனது நேர்காணல்

Published on Author Noolaham Foundation

வணக்கம், ஆடி 2011,  இதழ் 04.

யாழ் இந்துக்கல்லூரியின் பழைய மாணவனும், மொரட்டுவ பல்கலைக்கழக பொறியியல் பீட முதலாம் வருட மாணவனுமான சிவானந்தமூர்த்தி சேரன் யாழ் நீர்வேலியை சொந்த இடமாகக் கொண்டவர்.

இவர் அண்மையில் சர்வதேச அமைப்பான “ASHOKA FOUNDATION” இன் “ASHOKA YOUTH VENTURE” (அசோகாவின் இளம் முயற்சியாளர்) விருதினையும் பெற்றிருந்தார். இவர் கடந்த சில வருடங்களாக நூலக நிறுவன தன்னார்வ தொண்டராக ஆவணப்படுத்தலில் ஏற்பட்ட சுய விருப்பால் பணியாற்றி வருகின்றார். தற்போது நிறுவன இயக்குனர்களில் ஒருவராகவுள்ளார். நூலக நிறுவனம் பற்றியும், அதனுடைய ஆவணப்படுத்தல் செயற்பாடுகள் தொடர்பாகவும்,  அதனுடைய எண்ணிம நூலகம் சம்பந்தமாகவும் இங்கு நேர்காணப்படுகின்றது.

முதலில் நூலகம் வலைத்தளத்தைப் பற்றிக் கூறுங்கள்:

இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்களின் எழுத்தாவணங்களை எண்ணிமம்படுத்தி ஆவணப்படுத்தும் செயற்பாடுகளை ஊக்குவிப்பதோடு தகவல் வளங்களையும் அறிவுச்சேகரங்களையும் ஒழுங்குபடுத்தி அனைவருக்கும் கிடைக்கச் செய்துவரும் இலாப நோக்கற்ற தன்னார்வ முயற்சி www.noolaham.org என்கிற இணைய முகவரியில் இயங்கும் “நூலகம்” வலைத்தளம் ஓர் எண்ணிம நூலகம் ஆகும்.

அதாவது www.noolaham.org என்ற ஆட்களப்பெயரில் இயங்கும் இணையநூலகத்தை, கணனியும் இணைய இணைப்பும் உள்ள எவரும் பயன்படுத்த முடியும். இப்போது 9000 க்கும் அதிகமான எழுத்தாவணங்களின் விபரங்களும் இணைப்புக்களும் இந்த இணைய நூலகத்தில் உள்ளன. பருமட்டாகச் சொல்லுவதானால் இன்றைய தேதியில் 3500 நூல்கள் 3000 சஞ்சிகைகள்,1500 பத்திரிகைகள், 1000 சிறுவெளியீடுகள் என 9000 ஆவணங்கள் சகலராலும் பார்க்கக்கூடியவாறு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இவையனைத்தும் இலங்கை ஆவணங்கள்.இலங்கை ஆவணங்கள் என்னும் போது ஏதோவொருவகையில் இலங்கையுடன் தொடர்புள்ளவை. அவ்வகையில் இலங்கை எழுத்தாளர்களால் எழுத்தப்பட்டதோ அல்லது இலங்கைப் பதிப்பகங்களால் பதிப்பிக்கப்பட்டதோ அல்லது இலங்கை தொடர்பான விடயங்களை உள்ளடக்கியதோ என்றவாறு அமையும்.

எண்ணிம நூலகம் இதுவரை எண்ணிய பார்வையாளர்கள் எத்தனை, இது எவ்வளவு தூரம் வாசகர்களை சென்றடைந்திருக்கின்றது?

2007 ஆம் ஆண்டு அளவிலேயே ஒரு நாளைக்கு 300 வாசகர்கள் என்ற அடைவை தொட்டிருந்தோம். 2007 ஆம் ஆண்டின் இறுதியிலேயே நாங்கள் இன்று பயன்படுத்தும் மீடியாவிக்கி (Mediawiki) என்ற மென்பொருளை பயன்படுத்தத் தொடங்கினோம். அதற்கு முன்னர் சாதாரண(HTML) பட்டியல்களே காணப்பட்டன. தேடுவசதிகளற்ற சாதாரண பக்கங்களைக் கொண்ட தளமாகவே காட்சியளித்தது. ஆனால், மீடியாவிக்கி பயன்படுத்தத் தொடங்கியதன் பிற்பாடு இதன் உபயோகம் என்பது பல மடங்கு பெருகியிருக்கின்றது. ஏனெனில் பல்வேறு விதமான முறைகளில் ஓர் ஆவணத்தை அணுகமுடியும் என்பதும் பல்வேறு வகைப்பட்ட Access points அங்கு இருப்பதென்பதும் தேடலுள்ள வாசகனைப் பொறுத்தவரை சாதாரண விடயங்கள் அல்ல. ஆய்வாளர்களுக்கு உபயோகப்படக்கூடிய அளவிற்குக் கட்டமைப்பு முற்றுமுழுதாக மாற்றியமைக்கப்பட்டதன் காரணமாக சாதாரண வாசகர்கள் கூட பெருமளவில் பயன்பெற்றிருக்கின்றார்கள். சாதாரணமாக ஒரு பிரதியை இணையத்தில் காட்சிப்படுத்துவதுடன் இணைய நூலகத்தின் பங்கு முடிவடைந்துவிடுவதில்லை. பிரதியை வாசகனுடன் ஊடாட வைப்பதும் அதன்மீது கேள்விகளைக் கோரும் பிரதிகளை உற்பத்தி செய்வதும் கூட நூலகத்தின் பணியாக இருக்கமுடியும்.

பல வலைப்பதிவுகளிலும் இணையத்தளங்களிலும் நூலகத்திற்கான தொடுப்புகள் வழங்கப்பட்டிருந்தன. இவ்வகையான தொடுப்புக்கள் ஊடாகப் பலர் தளத்தை வந்தடைந்து பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள். ஆரம்பத்தில் புலம் பெயர் தமிழர்களே நூலகத்தின் பெரும்பான்மையான பாவணையாளர்களாகவிருந்தார்கள். இப்போதும் கூட புலம்பெயர் சமூகத்தவரது பாவனையின் அளவு குறைந்து விடாதபோதும், அதில் பெருமளவான வளர்ச்சிப் போக்குக் காணப்படவில்லை. ஆனால், இப்போது பார்வையாளர்களில் பெரும்பாலானோர் இலங்கை, இந்திய நாடுகளிலிருந்தே வருகை தருகின்றார்கள். இப்போதுள்ள பாவனையாளர்களில் 40 சதவிகிதமானவர்கள் இலங்கையிலிருந்தும் 40 சதவிகிதமானவகள் இந்தியாவிலிருந்தும் மிகுதி 20 சதவிகிதமானவர்கள் ஏனைய நாடுகளிலிருந்தும் என எமது புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

மற்றையது, அறிமுகங்களை ஒரு கட்டத்திற்கு மேல் அதில் செயற்படுவர்களே நிகழத்திக் கொண்டிருக்க முடியாது. அவை பரவலாக பாவனையாளர்களாலும் இதனால் பயன்பெறப்போகும் சமூகங்களாலும் நிகழ்த்தப்பட வேண்டியவை. இவ்வாறான செயற்றிட்டங்களைப் பொறுத்தவரை அறிமுகம்/ பரவலாக்கம் என்பவை அதிக முக்கியமானவை என்ற போதிலும், இவற்றிற்காக அதிகளவான வளங்களை ஒதுக்குவதற்கு மனம் ஒப்பவில்லை என்பதே உண்மை. உங்களைப் போன்ற (வணக்கம் சஞ்சிகை) செயற்பாட்டாளர்களால் நிகழ்த்தப்படும் அறிமுகங்கள் நிச்சயமாக எம்மைப் பொறுத்தவரை மிகப் பெறுமதியானவை.

நூலகத்தின் ஆரம்ப காலத்தில் பெருமளவில் இலக்கியம் சார்ந்த வாசகர்களே பயனாளர்களாக இருந்த நிலைமை படிப்படியாக மாறி, தற்போது அரசியல் செயற்பாட்டாளர்கள், சமூகவியல் ஆய்வாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் என பயனாளர்களின் வடிவம் வெகுவாக மாறியுள்ளது. அடுத்த கட்டமாக பாடசாலை மாணவர்களைப் பெருமளவு பயனாளர்களாக மாற்ற வேண்டிய தேவையின் நிமித்தமாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.

இந்த பயன்மிக்க காரியம் 2005 ஆம் ஆண்டில் ஆரம்ப்பிக்கப்பட்ட பின்னனி என்ன…?

2005 ஆம் ஆண்டு காலப் பகுதிக்கு முன்னராக மதுரை திட்டம் போன்ற செயற்திட்டங்களில் நண்பர்கள் இயங்கி வந்திருக்கின்றார்கள். இயங்கி வந்த வேளையில் இலங்கைக்கென, இலங்கை நூல்களை தனியே பாதுகாப்பதற்கான ஒரு செயற்திட்டம் தேவை என்ற எண்ணம் வலுப்பெற்றிருக்கின்றது. அவ்வேளையில் முக்கியமாக இலக்கியம் சம்பந்தமான நூல்களை மையமாக வைத்து இச்செயற்திட்டம் தொடங்கப் பெற்றிருக்கின்றது. ஆரம்பத்தில் தட்டெழுதப்பட்ட நூல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. ஆயினும் பிற்காலத்தில் நூல்கள் என்ற வரையறையைத் தாண்டி சஞ்சிகைகளும் சேர்க்கப்பட்டன. அதன்பின்பு பத்திரிகைகள், சிறுவெளியீடுகள் என இதர  எழுத்தாவணங்களும் உள்வாங்கப்பட்டு இன்று இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்களின் சகல எழுத்தாவணங்களும் ஆவணப்படுத்தப்படும் ஓர் ஆவணகாப்பகமாக இது பரிணமித்துள்ளது. எதிர்காலத்தில், எழுத்தாவணங்களத் தாண்டி இதர ஆவணங்களையும் உள்ளடக்கிய ஆவணக்காப்பகமாக மாற்ற, அதைச் செயற்படுத்துவதற்கான தொழில்நுட்ப சாத்தியங்கள் தொடர்பாக ஆய்வு செய்து கொண்டுள்ளோம். அவ்வகையில் ஒலிக் கோப்பு (audio), நிகழ்படம் (Video),இயங்குபடம் (Animation),நிகழ்த்தல் (PPT),படங்கள்(images),தரவுகள் (Data)போன்றவற்றையும் நாங்கள் எதிர்காலத்தில் சேர்த்துக் கொள்ள இருக்கின்றோம்.

எத்துனையோ நூலகங்கள் கட்டிடங்களாகவும் வெறும் சுவர்களாகவோ உள்ள நிலையில் ஏன் இந்த எண்ணிம நூலகம்?

இலங்கைத் தமிழ்ச் சமூகங்கள் ஏதோவொருவகையில் முற்று முழுதாக சிதைக்கப்பட்ட ஒரு சமூக அமைப்பாகக் காணப்படுகின்றன். தமது நிலம் தொடர்பான  ஆதாரங்களிலிருந்து ஏதோ ஒரு வகையில் பெயர்க்கப்பட்டுள்ள ஒரு சமூகம். இலங்கையில் வாழும் எண்ணிக்கைக்குச் சற்றும் குறைவில்லாத அளவானோர் புலம் பெயர்ந்து பல்வேறுபட்ட நாடுகளிலும் திக்கு திக்காக வாழுகிறார்கள். யுத்தம் முடிவடைந்துள்ள போதிலும் புலம் பெயர்தல் தொடர்ச்சியாக நிகழ்ந்து கொண்டுதானிருக்கின்றது. அதே நேரம், புவியியல் அமைவிடம் சார்ந்து இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்களுக்கென ஓர் ஆவணக்காப்பகத்தை அமைப்பதற்கான சூழ்நிலை எங்கும் காணப்படவில்லை. அவ்வாறு குறித்த இடத்தில் அமையப்பெற்றாலும் அதன் மூலம் எல்லோரும் பயன்பெறுவார்கள் எனக்கூற முடியாது. ஆக, இணையமூலமான ஆவணக்காப்பகம் மாத்திரமே ஓரே தெரிவாக உள்ளது. இவ்வாறான காரணங்கள் எமது செயற்திட்டங்களுக்கும் இயக்கத்திற்கும் வலுச் சேர்ப்பதாக அமைகின்றன. ஒருவகையில் இதன் மூலமான அதீத பயனென்பது எம்மை மூர்க்கமாக இயங்க வைக்கின்றது என்றுகூடக் கூற முடியும். ஏனெனில் நீண்டகாலப் போக்கில் இதன் பயனென்பது நினைத்துப் பார்க்க முடியாத விடயம். தகவல் சமூகமும் அதன் நகர்வும் எமக்கு எடுத்தியம்புவதும் அதைத்தான். இவ்வாறு சிதைந்துபோயுள்ள இந்த சமூகங்கள் இணையம் மூலமாக மாத்திரமே ஏதோ ஒரு வகையில் ஒருங்கிணைக்கப்படுகிறது. அவ்வகையில் இச்செயற்திட்டம் அதிக முக்கியத்துவம் பெறுகின்றது. என்னைப் பொறுத்தவரை தொடங்கியதன் பின்னணி அதன் நகர்வுகளில் பல்வேறுபட்ட காரணங்களையும் சேர்த்துக் கொண்டு இன்று அதன் பெறுமானத்தை அதிகமாக்கியிருக்கின்றது என்று தான் கூறுவேன்.

புதிய முயற்சிகளில் ஆரம்பமென்பது மணல் திரித்து கயிறாக்குவது  போல இருக்கும்… இளையவர்களாகிய உங்களின் நடைபழகுதல் எப்படியிருந்தது?

இச்செயற்திட்டம் 20தள இல் தொடங்கப்பட்ட போது இதை  செயற்படுத்தியது ஆக இரண்டே இரண்டு பேர் மாத்திரம் தான். எவ்விதமான பின்னணியுமற்ற சமூக நோக்குள்ள ஆரம்பமாக அமைந்திருக்கின்றது. 20தள ஆம் ஆண்டு தைப் பொங்கல் தினத்தில், ஒரு மின்நூலகமாக நூலகத் திட்டம் என்ற விடயத்தில் தொடங்கப்பட்டிருக்கின்றது. இரண்டே இரண்டு நபர்கள் ஒரு மடலாடல் குழு ஒரு வலைத்தளம் ஏராளமான மன உறுதி ஆகியவையே நீங்கள் இன்று காணும் 500,000 பக்கங்களை ஆவணப்படுத்தியுள்ள நூலகத்தின் மூலதனமெனில் நம்பக் கடினமாகவே இருக்கும். படிப்படியாக பல்வேறுபட்ட ஆர்வலர்களையும் நலன் விரும்பிகளையும் இணைத்துக் கொண்டு நகர்ந்திருக்கின்றது. “இணைத்துக்கொள்ளுதல்” என்ற தன்மை தாய்மையுடன் தொடர்புள்ள அதன் தன்மையே இன்றைய வளர்ச்சி வரைக்கும் காரணமாக இருந்திருக்கின்றது என்றே நம்ப வேண்டியிருக்கின்றது.

நான் நினைக்கின்றேன், முதல் இரண்டரை ஆண்டு நிறைவுறும் காலப்பகுதியில் 60 தன்னார்வலர்கள் பங்களிப்பாளர்களாக இருந்திருகின்றார்கள். ஒவ்வொருவருடைய வேலையையும் சமப்படுத்தி நோக்கமுடியாது. ஒவ்வொருவரும் பல்வேறு விதமான பங்களிப்பை வழங்கி இருக்கின்றார்கள். ஒரு விதத்தில் தன்னார்வப் பங்களிப்புக்களில் சமனற்ற பங்களிப்புக்களே அதன் விசேட அம்சம் என்று கூறுவேன். சிலர் ஆலோசகர்களாகச் செயல்பட்டிருக்கிறார்கள், தட்டெழுத்திற் நூல்களை இணைத்திருக்கின்றார்கள் தட்டெழுத நூல்களை வழங்கியிருக்கின்றார்கள், தொழில்நுட்பப் பங்களிப்பில் உதவியிருக்கின்றார்கள் என்றவாறாக ஒரே தளத்தில் வைத்து அணுக முடியாத பல்வேறுபட்ட பட்ட பெறுமதியுடைய் பல்வேறு தளங்களில் அமைந்த பங்களிப்புக்கள். ஏன், மடலாடல் குழுவில் மடல்களை எழுதுவதன் ஊடாகத் திட்டத்தைச் செழுமைப்படுத்துபவர்களாக உதவியிருக்கின்றார்கள். ஆரம்ப கட்ட பங்களிப்பு நிலவரங்கள் இவ்வாறு தான் அமைதிருந்தன.

நூலக நிறுவனம் எப்போதிருந்து, எவ்வாறு இயங்கி வருகிறது?

நூலக நிறுவனம் (www.noolahamfoundation.org) பதிவுசெய்யப்பட்டது சென்ற ஆண்டு 2010 மே மாதம் தான். 2009 இலிருந்து முக்கிய பங்களிப்பாளர்களை இணைத்துக் கொண்டு நிறுவனமாக இயங்கிவருகிறோம். நூலகத் திட்டத்துக்கு வெளியேயானதாகவே நிறுவனம் உள்ளது. ஆனால் நிறுவனத்தின் பெரும்பாலான வளங்கள் நூலகத் திட்டத்துக்குச் செலுத்தப்படுகின்றன. அவ்வகையில் நூலகம் வலைத்தளத்தை 2008 இல் பொறுப்பெடுத்து அதனை மிகப் பயனுள்ளதொன்றாக வளர்த்தெடுத்துள்ளோம். நிறுவனம் என்பது வேறொருவிதமான விடயம். அந்த நிறுவனம் நூலகம் போன்ற வேறுவகையான செயற்திட்டங்களுக்கும் உதவிபுரிய கூடிய ஒன்றாகும். பல்வேறுதரப்பட்ட நூலகவியல், ஆவணப்படுத்தல் தொடர்பான நிறுவனங்களுடன் ஏதோ ஒரு வகையில் நாங்கள் ஊடாடிக் கொண்டிருக்கின்றோம். அவர்களுடைய உதவியை பெற்றுக் கொண்டுள்ளோம் பெற்றுக் கொண்டிருக்கின்றோம். அதே நேரம், எங்களால் இயன்ற உதவியை பிற நூலகம் சார்ந்த அமைப்புக்களுக்குச் செய்து கொண்டிருக்கின்றோம். நிறுவனமாக இயங்கினாலும் தன்னார்வ வெளியை (Volunteer space)இயலுமான வரைக்கும் குறுக்காத வரையில் பார்த்துக் கொள்கிறோம். அதை மேலும் மேலும் எவ்வாறு அகலித்துச் செல்வதென்பதே எமக்கு முன்னுள்ள மிகப்பெரிய சவாலாகும். ஏனெனில், தன்னார்வ வெளிதான் இந்த செயற்பாட்டின், இந்த சமூக இயக்கத்தின் அடிநாதம். தன்னார்வ வெளியை நாங்கள் குறுக்க முயல்வது ஏதோவொரு கட்டத்தில் எமக்குப் பாதகமானதாகவே அமையும். நாம் அடைய வேண்டிய இலக்கை மாத்திரம் மனதில்கொண்டு நகரும்போது, பல்வேறு விதமான தடைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். சரியான பாதைகள் சிலவேளை பயணிக்கக்கூடிய சாத்தியமான பாதைகளாக இருப்பதில்லை. அதேநேரம் பயணிக்க இலகுவான பாதைகள் சரியானவையாக இருப்பதில்லை. இவற்றிற்கு இடையிலான புள்ளிகளைக் கண்டடைந்து எமக்கான பாதைகளை வரைந்தவாறு முன்னோக்கிச் செல்வது மிகக்கடினமானது என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்து கொண்டுள்ளோம்.

தற்போது மொத்தமாக தன்னார்வ பங்களிப்பாளர்கள் என்று பார்த்தால் 500லிருந்து 600 பேர் என்ற எண்ணிக்கையைத் தாண்டியுள்ளது. நூலகம் நிறுவனம் என்ற அளவில் வைத்து பார்க்கும் போது அதன் வடிவமே எமது தேவைகள்  சார்ந்தே உருவாக்கப்பட்டது தான். பிற நிறுவன முன்மாதிரிகளைக் கூட நாம் முற்றுமுழுதாகப் பின்பற்றவில்லை. தொழில்நுட்பம் தொடர்பான பொறுப்புக்கள், பரவலாக்கல் தொடர்பான பொறுப்புக்கள், நிறுவன நிதிக்கையாள்கை தொடர்பான பொறுப்புக்கள் என பொறுப்புக்களை வரையறுத்து ஏற்கனவே அவ்வெளிகளில் இயங்கியவர்களை அதற்குப் பொறுப்பாக நியமித்துள்ள அதேநேரம், அவர்கள் சுயமாக தாங்கள் மற்றும் தங்கள் பொறுப்புக்கள் சார்ந்து தன்னார்வக்குழுக்களை அமைத்து செயற்படுகின்றார்கள். இதன்மூலம் அதிகாரப் படிநிலைகளில் இறுக்கத்தை குறைத்து இயங்குவதற்கான பொறிமுறையைக் கட்டமைப்பதே முக்கிய நோக்கம். இவ்வகையான அதிகாரப் பிரிப்புக்களும் அவற்றின் இயங்குகைக்கான வெளிப்படைத்தன்மைகளும் ஜனநாயக ரீதியான அமைப்பை உருவாக்குவதோடு ஜனநாயக ரீதியான செயற்பாடுகளுக்குக் களம் சமைக்கும் என்று எதிர்பார்க்கின்றோம்.

அடுத்து, செயல்பாட்டுத்தளத்தில் மாணவர் தரப்புக்களை உள்வாங்குவது மிகமுக்கியமானது. முதலாவது அவர்களுக்கு இது தொடர்பான அக்கறையை உண்டாக்குகின்றோம். இரண்டாவது அவர்களால் சமூகம் சார்ந்த விடயங்களைப் பொறுப்பேற்றுச் செய்யக்கூடிய திறனையும் வளர்க்கின்றோம்.  மாணவர்கள் இன்றி Volunteerism என்பது தொழில்நுட்ப வெளிகளுக்கப்பால் மிகவும் சுருங்கிப் போய்விட்டது. மாணவப்பருவம் மாத்திரமே ஓரளவிற்கு Volunteerism சார்ந்த சாதகமான காலப்பகுதியாகும். தொழில்துறையை வளர்க்கும் நோக்குடைய கல்வி முறைமை, மாணவர்களது சமூகச் செயற்பாட்டுக்கு முட்டுக்கட்டையாக இருக்கின்ற அதேநேரம், கிடைக்கும் மெல்லிய இடைவெளிகளில் அவர்களை ஈடுபடுத்தித்தான் ஆக வேண்டியிருக்கின்றது. மூன்றாவது மாணவப்பருவச் செயற்பாடுகள் ஏதோவொருவகையில் அதற்குப் பின்னைய காலத்திய செயற்பாடுகளில் தாக்கம் செலுத்தும். வெவ்வேறு பரப்புக்களில் இயங்க நினைப்பவர்களுக்கான களமாக இதனை வளர்த்தெடுத்தவாறிருக்கின்றோம்.

2005 ஆம் ஆண்டிலிருந்து படிப்படியாக ஆவணவாக்கலில் தொகை ரீதியில் முன்னேற்றம் எப்படி,…. இலக்கு பற்றி என்ன கூறுகின்றீர்கள்?

முதல் வருடத்தில் 100 (நூறு) ஆவணங்கள் ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன. இரண்டாம் வருடத்தில் 262 (இருநூற்று அறுபத்தியிரண்டு) ஆவணங்கள். மூன்றாம் வருடம் 1256 ஆவணங்கள். நான்காம் ஆண்டு 1270 ஆவணங்கள். நான்காம் ஆண்டு 2190 ஆவணங்கள். ஐந்தாம் ஆண்டு 3109 ஆவணங்கள். இப்போது ஆறாண்டு முடிவில் எண்ணாயிரத்து நூறு ஆவணங்களை எங்களால் ஆவணப்படுத்த முடிந்திருக்கின்றது.

இனி வரும் காலங்களில் தனியே ஆவணங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது என்பதை மாத்திரம் இலக்காகக் கொள்ளாமல், ஆவணங்களைப் பாதுகாப்பது தொடர்பான அக்கறையை பரவலாக மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் நோக்கிலான செயற்பாடுகளையும்  சமாந்தரமாகச் செய்ய வேண்டும் என்று விரும்புகின்றோம். எமது உண்மையான வெற்றி தனியே ஆவணப்படுத்துவதிலும் ஆவண எண்ணிக்கையைக் கூறிப் பெருமைப்படுவதிலும் மாத்திரம் தங்கியில்லை. ஆவணப்படுத்தல் தொடர்பான ஆர்வத்தை சமூகத்தில் எவ்வளவு தூரம் ஏற்படுத்தியிருக்கின்றோம். என்பதிலும் ஆவணப்படுத்தல் தொடர்பான பிரக்ஞையின் மூலமான வெளிப்பாடுகள் எவ்வளவு தூரம் ஆரோக்கியமாக இருக்கின்றது என்பதிலும் தான் தங்கியிருக்கின்றது. அந்தவகையில் யாழ்ப்பாணத்தில் இருந்து சில தன்னார்வலர்கள் தமது வீடுகளில் இருந்தே எம்மிடம் பயிற்சி பெற்ற பின்னர் மின்னூக்கத்தில் சுயமாக ஈடுபடுகிறார்கள்.

எக்காரணங்களினால் ஆவணப்படுத்துவதில் இரண்டு வருடகாலத்திற்கு பிறகு ஒரு பெரும் பாய்ச்சல் ஏற்பட்டது?

ஆரம்பக்கட்டத்தில் தட்டெழுதப்பட்டு மட்டும் ஆவணங்கள் இணைக்கப்பட்டன. ஒரு கட்டத்திற்குப் பின்னர் எமது வளர்ச்சிப்படியில் Digital Library  என்ற கருத்தியலைத்தாண்டிச் சிந்திக்கத் தொடங்கினோம். Digital Library என்ற எண்ணக்கரு ஆவணக்காப்பகமாக மாற்றம் பெற்றது. ஆவணங்களை ஆவணங்களாக அதே வடிவத்தில் அப்படியே காட்சிப்படுத்தல் பாதுகாத்தல் என்பது தொடர்பான அக்கறையின் காரணமாக மின்பிரதியாக்கம் (Scan)செய்யும் ஒரு முறையை நோக்கி நாம் நகர வேண்டி வந்தது. மின்பிரதியாக்க முறையின் மூலம் தட்டெழுதுவதை விட கிட்டத்தட்ட 30 மடங்கு அதிகமான ஆவணங்களை ஆவணப்படுத்தக் கூடியதாக இருந்தது என்பது முதலாவது முக்கியமான விடயம். இரண்டாவது முக்கியமான விடயம் நூல்கள் என்ற நிலையைத்தாண்டி சஞ்சிகைகளையும் ஆவணப்படுத்தக்கூடிய நிலைமை மின்பிரதியாக்கம் மூலமே சாத்தியமானது. ஆக, தட்டெழுதுவதைவிட மின்பிரதியாக்கம் செய்வதன் மூலம் ஆவணப்படுத்துவது அதிகம் வசதியானதாகக் கருதப்பட்டது.ஆவணப்படுத்தலின் துல்லியம், வேகமாக ஆவணப்படுத்தல் ஆகிய காரணங்களால் ஒரு கட்டத்தில் தட்டெழுதுவதன் மூலமான ஆவணப்படுத்தல் முறைமைமுற்றாக இல்லா தொழிக்கப்பட்டு மின்பிரதியாக்க முறைமை ஆதிக்கம் பெற்றது.

அதேநேரம், எமக்குத் தன்னிடமிருந்த முழு சேகரிப்பையும் தந்துதவிய எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் அவர்கள் இச்சடுதியான மாற்றத்திற்கு ஒரு காரணமென்று கூறுவேன். ஏனெனில் அந்நேரத்தில் அவர் தன்னிடமிருந்த முழுச்சேகரங்களையும் எமக்கு தந்துதவினர். அதன் காரணமாக ஒரே வருடத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆவணங்களை இணையத்திற்குக் கொண்டுவருவது சாத்தியமானது. அதேநேரம், அதற்குப் பின்னர் வந்த வருடங்களில் வருடாந்த ஆவணப்படுத்தல் எண்ணிக்கையைக் குறையாமல் பார்த்து கொண்டோம். இனி வரும் காலங்களில், மாதத்திற்கு ஆயிரம் ஆவணங்கள் என்ற இலக்கை நோக்கிச் செல்ல வேண்டும் என்றொரு உந்துதலுடன் செயற்பட்டு கொண்டிருக்கிறோம். அது சாத்தியமாகுமா, இல்லையா என்பது தொடர்பாக நிறைய கேள்விகள் இருந்தாலும், ஏதோ ஒரு கட்டத்தில் அதை சாத்தியமாக்கி விடுவோம் என்று நம்புகிறோம். என்னைப் பொறுத்தவரை அவ்வெல்லையையே, உச்ச எல்லையாக வரையறுக்க நினைக்கின்றேன். அவ்வெல்லையை அடைந்ததன் பிற்பாடு நாம் ஆவணப்படுத்தலுடன் சார்ந்த பிற தளங்களில் கவனத்தைச் செலுத்த வேண்டும் என்பது எனது எதிர்பார்பாக உள்ளது. ஆவணங்களை பல்வேறுவகையாக ஒழுங்குபடுத்தல், ஒழுங்குபடுத்தப்பட்ட ஆவணங்களைப் பயன்படுத்திய ஆய்வுகள், அரிதான ஆவணங்களைத் தேடிச் செல்லுதல், எழுத்தாவணங்கள் தவிர்ந்த பிற ஆவணப்படுத்தல் செயற்பாடுகளில் கவனத்தைக் குவித்தல் என்பது போன்ற பலவிதமான பொறுப்புக்கள் எம்முன் குவிதுள்ளன.

எண்ணிமப்படுத்தும் ஆவணங்களை எப்படி நிர்ணயம் செய்கிறீர்கள்?

ஆரம்ப காலக்கட்டத்தில் பெரும்பாலும் இலக்கியம் சார்ந்த நூல்களே ஆவணப்படுத்தப்பட்டன. புனைவுகள், அபுனைவுகள் என்று பார்த்தால் கூட பெரும்பாலும் இலக்கியம் சார்ந்தவையாகவே காணப்படுகின்றன. திட்டத்துடன் தொடர்புள்ளவர்களது தெரிவுகள் முதன்மை பெற்றிருந்ததனால் அவ்வாறு காணப்பட்டிருந்தாலும் பிரேத்தியேகமான காரணங்கள் இருந்திருக்கும் என  நினைக்க்கவில்லை. அதன் பின்பு சஞ்சிகைகள் மற்றும். இதர எழுத்தாவணங்கள் என எவ்வாகையான எழுத்தாவணங்களாக இருப்பினும் அவை அச்சில் வெளிவந்திருப்பின், ஆவணப்படுத்தத் தகுதியானவை என்றவாறாக மாற்றம் பெற்றது. அச்சில் வெளிவந்திருக்க வேண்டும் என்பது மாத்திரமே எமது நிபந்தனையாகத் தொடர்கின்றது.

தரமானது / தரமற்றது, பயனுள்ளது / பயனற்றது போன்ற தணிக்கைகள் எதனையும் நாம் பின்பற்றுவதில்லை. அது எமது வேலையும் அல்ல. அவை விமர்சகர்களும் சமூகமும் தீர்மானிக்க வேண்டியவை. எதிர்காலச் சந்ததிக்கு இன்றைய காலப்பகுதியிலும் கடந்த காலப்பகுதியிலும் அச்சில் வெளிவந்த ஆவணங்களை விட்டுச் செல்வது மாத்திரமே நூலகத்திற்கூடான எமது பணியாகும். எந்தவொரு ஆவணத்தையும் அழிய விடப்போவதில்லை என்ற குறிக்கோளுடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.

மருத்துவப் பதிவேடு (Medical Records), நில உரிமைப் பதிவுகள் (Landrights documents) போன்ற ஆவணங்களைக் கூட ஆவணப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. எதிர்காலத்தில் பொதுத்துறை நிறுவனங்கள் (Public Institution) போன்றவற்றின் ஆவணங்களையும் நாங்கள் ஆவணப்படுத்த வேண்டும் என்று கரிசனையுடன் செயற்பட நினைக்கின்றோம் எவ்வளவு தூரம் சாத்தியப்படும் என்று தெரியவில்லை. அசாத்தியங்களைச் சாத்தியமாக்குவது தானே செயற்பாட்டாளர்களின் பணி.

மிகமுக்கியமான கேள்வி… இவ்வாறான பொதுப்பணிகளுக்கு நிதி ஒரு முக்கிய தடை… நூலகத்துக்கு நிதியுடனான உறவாடல் சுகமாக இருக்கின்றதா..?

நாம் நிறுவனமயமாகாமல் இயங்குவது என்ற விடயத்தில், கவனம் செலுத்தி வந்திருந்த போதிலும், ஒரு கட்டத்தில் நிறுவனக் கட்டமைப்பிற்குள் உட்படாமல் அடுத்த கட்டத்திற்குச் செல்லமுடியாது என்ற நிலைமை வந்த போதே நிறுவனமாகப் பதிவு செய்தோம்.  நிறுவனமாகப் பதிவு செய்த போதிலும், வழமையான நிறுவனங்களுக்குள்ள பண்புகளுடன் இயங்காமல் இச்செயற்பாட்டை ஒரு சமூக இயக்கமாக வளர்த்து செல்லும் பாணியில் தான் இயக்கிக் கொண்டிருக்கிறோம். எமக்கென அலுவலகம் எதுவுமில்லை. பல்வேறுபட்ட நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு அவற்றின் உதவிகளைப் பெற்றவாறே இயங்கிக் கொண்டிருக்கின்றோம். செலவுகளை இயன்றவரை மிகவும் கட்டுப்படுத்தியவாறே இயங்குகின்றோம். எமது வரவு செலவு விபரங்களை வெளிப்படையாக வலைத்தளத்தில் வெளியிடுகிறோம். எமது செயற்பாடுகளை நிறுவன தளத்தின் மூலமாக வெளியுலகிற்குத் தொடர்ச்சியாகத் தெரியப்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.

எமக்குக் கிடைக்கும் நிதியுதவிகள் அனைத்தும் எமது செயற்பாடுகளைப் பார்த்தவர்களும் பயனடைந்தோரும் வழங்கியவை தான். ஓரிருவரே மிகப்பெரிய நிதியுதவியை அளிக்கும் சந்தர்ப்பங்களைத் தவிர்க்க நினைக்கின்றோம். மாறாக, ஆயிரக்கணக்கான பயனாளர்களது சிறிய அன்பளிப்புக்களைக் கொண்டு இயங்குவதே ஆரோக்கியமானது. இவ்வகையான அணுகுமுறை பெருமளவான உழைப்பைக் கோரும் செயற்பாடென்ற போதிலும் இயன்ற வரை பங்களிப்பாளர்களது எண்ணிக்கையை அதிகரிப்பதே சிறந்தது. இயன்றவரை நிதிக்கொடுக்கல் வாங்கல்கள்  மூலமான செயற்பாடுகளை இழிவாக்கி, இதர பங்களிப்பு முறைகளை ஊக்குவித்தவாறிருக்கின்றோம். சமூக இயக்கமாக மாற்றிக் கொண்டுள்ள நிலையில் எதிர்காலத்தில் தொடர்ச்சியாகப் பெருமளவு நிதி கையாளுகை இருக்காது என்ற போதிலும், பத்திரிகைகளை ஆவணப்படுத்துவது போன்ற செயற்பாடுகளுக்கு இன்னும் அதிகமான நிதி தேவைப்படும். அதுமட்டுமல்லாது அசைபடங்கள் மூலமான  ஆவணப்படுத்தல்கள் இன்னும் அதிகமான நிதியைக் கோரும் செயற்பாடுகளாகும்.

பல்வேறுபட்ட சமூக அக்கறையுள்ளவர்களிடமிருந்தும் நண்பர்களிடமிருந்தும் ஒரு சில நிறுவனங்களிடமிருந்துமே நிதி பெறப்படுகின்றது. இன்றைய தேதி வரையில் பெரியளவான நிறுவனங்களது எவ்வித நிதியுதவியையும் பெற்றுக் கொள்ளவில்லை. ஒரு வகையில் இச்செயற்றிட்டத்தினூடான எமது ஆத்மார்த்தமான பிணைப்பிற்கு இதுவே காரணமென்பேன். பெரும் நிதிக்கையாள்கை நிச்சயமாக இச்செயற்றிட்டத்தின் உயிர்ப்பைச் சிதைத்து விடும் தன்மை கொண்டது.

நிறுவனமான பிறகும் எங்களுக்கு நிதியைப் பெறுவதற்கு வாய்ப்புக்கள் அதிகமாகி இருக்கின்றது. நிறுவனம் என்ற பெயரில் ஒரு அங்கீகாரம் கிடைக்கிறது. அதன் மூலம் எங்கள் திறமையான செயல்பாடுகளைத் கொண்டு நிதியை கேட்கலாம். அதற்காக விண்ணப்பிக்கலாம்

அப்படியிருந்தும் கூட நாங்கள் இன்று வரைக்கும் தனிப்பட்ட நபர்கள் அல்லது தனிப்பட்ட நபர்கள் சார்ந்த மிகச்சிறிய நிறுவனங்கள் ஊடாகத்தான் நிதியைப் பெற்றுக் கொள்ளும் நோக்கமிருப்பினும் கூட நிறுவனத்தை பல தன்னார்வலர்களது சின்னஞ்சிறிய பங்களிப்புக்கள் மூலம் இயக்குவதே சிறந்தது. குறிப்பிட்ட செயற்றிட்டங்களுக்கு மாத்திரம் நிதி கேட்டு விண்ணப்பிக்கலாம். நிறுவனத்தின் அடிப்படைச் செயற்பாடுகள் எப்போதும் தன்னார்வலர்களாலும் தன்னார்வலர்களது சின்னஞ்சிறிய நிதிப்பங்களிப்புகளாலும் மாத்திரம் நிறைந்திருக்க  வேண்டுமென்பதே எனது விருப்பமாகும்.

மரபிலிருந்து மாறியிருக்கும் உங்களுக்கு தொழினுட்ப உதவிகள் நிச்சயம் அவசியம்  அல்லவா… அவை எப்படி கிடைக்கின்றன?

ஆரம்பத்தில் பெரும்பாலான தொழில்நுட்ப விடயங்களை மு.மயூரன் பார்த்துக் கொண்டிருந்தார். மீடியாவிக்கியை நூலகத் தளமாக ஒழுங்கமைத்தவர் கோபிநாத் என்றபோதிலும் அதன் பின்னர் அதனை ஒவ்வொரு விடயங்களையும் மாற்றம் செய்தவாறு, அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றவர் தமிழ் நாட்டை சேர்ந்த ஓர் இளைஞர் வினோத்ராஜன் என்னும் தோழர். தமிழ் விக்கிப்பீடியாவினூடாக அறிமுகமாகிய அவர் தன்னார்வலராக இன்று வரைக்கும் எம்முடன் இணைந்து செயற்பட்டு வருகின்றார். நிமலபிரகாசன் போன்றோருடன் இணைந்து வினோத் தொழில்நுட்பக் குழுவொன்றை செயற்படுத்தி வருகின்றார். பல்வேறுபட்ட தொழில்நுட்பத் தன்னார்வலர்களுடன் கலந்துரையாடி முடிவுகளை எடுப்பதோடு அவர்களது பங்களிப்பின் மூலம் அவற்றைச் செயற்படுத்தியும் வருகின்றோம்.

நூலக வலைத்தளத்தின் பயன்பாடு, நிறுவனமாக இதுவரை சாதித்தவை என்று எவற்றைச் சொல்லலாம்?

நூலகத் தளத்தின் பயன்பாடு தொடர்பில் நேரடியாக அளவீடு சாத்தியமில்லை. ஆனால் பல வலைப் பதிவுக் கட்டுரைகளிலும், ஆய்வுக் கட்டுரைகளிலும், தமிழ் விக்கிப்பீடியா  போன்றவற்றிலும் நூலகம் பெருமளவில் உசாத்துணையாகப் பயன்படுகிறது. ஏற்கனவே குறிப்பிட்டது போல இலங்கை, இந்தியப் பயன்பாடு மிக அதிகரித்துள்ளது. எண்ணிம ஆவணப்படுத்தல் தொடர்பில் தமிழ்ச்சூழலில் முன்மாதிரிச் செயற்திட்டமாக உள்ளோம் என்பதைக் குறிப்பிடலாம். இதற்கு நல்ல உதாரணங்கள் பொள்ளாச்சி நசனின் நாள் ஒரு  நூல் திட்டம், தமிழ்த் தேசிய ஆவணக் காப்பாளராகச் செயற்படுபவர். அவர் நூலகத்தை முன்மாதிரியாகக் கொண்டு தொடங்கிய நாள் ஒரு நூல் எனும் செயற்திட்டம் இப்போது 2000 ஆவணங்களைக் கொண்டிருப்பதோடு வேகமாக வளர்ந்து வருகிறது. இதுபோல தமிழரங்கத்தினர் நூலகத்துக்கு நிதியுதவி செய்பவர்கள்.இப்பொழுது தாமும் ஆவணப்படுத்தலில் செயற்படுகின்றனர். அவ்வகையில் நல்லதொரு முன்மாதிரியாக, ஊக்குவிப்பாக இருக்கிறோம் என்பதில் மகிழ்ச்சியே. இன்னும் நிறைய, இன்னும் வேகமாக இத்தகைய செயற்பாடுகள் நடைபெற வேண்டும்.

நிறுவனமாக நாம் சாதிக்க வேண்டியவை பல வெறும் ஆவணப்படுத்தல் நிகழ்வுகளைத்  தாண்டி அவற்றின் தேவை தொடர்பாகத் தொடர்ச்சியாக சமூகத்தின் மத்தியில்  இயங்குவதோடு ஆவணப்படுத்தல் என்னும் புள்ளிகளைத் தாண்டிய செயற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டியுள்ளது. மரபறிவுப் பாதுகாப்பு, தகவல் அறிதிறன், அறிவிப்பரம்பல், கல்வி மேம்பாடு என நாம் இயங்கவேண்டிய தளங்கள் எம் கண்முன்னே எண்ணற்றுப் பெருகிக்கொண்டிருக்கின்றன. இவ்விடயங்களை தனிமனித நிகழ்வு என்ற புள்ளியில் இருந்து நிறுவனத்தின் செயற்பாடு என்ற புள்ளியை நோக்கி நகர்த்தியிருக்கின்றோம். இவ்விடைநிலைப்புளியில் இருந்து சமூகப் பேரியக்கமாக மாற்றவேண்டிய மிகப்பெரும் கடப்பாடு எமக்குள்ளதாகக் கருதுகின்றோம். இவை எல்லாவற்றுக்கும் மேலாக சமுதாய சிந்தனையுடன் தன்னார்வலர்களாக குறிப்பிட்ட சில எண்ணிக்கையான இளைஞர்களையாவது இயங்கவைத்துள்ளோம் என்பது எமக்கு பெருவெற்றியே. அவர்கள் தமது வாழ்கையில் முக்கியமான பகுதிகளை இதனுடன் செலவிட்டு செய்த தியாகங்கள் பொன் எழுத்துகளால் எதிர்காலத்தில் பொறிக்கப்படும் என்பதில் ஐயமில்லை. எது எவ்வாறாயினும் நம்பிக்கையளிக்கும் சூழல் நிலவுகிறது என்றே நினைக்கிறேன்.

பிரதியை வாசகனுடன் ஊடாட வைப்பதும் அதன் மீது கேள்விகளைக் கோரும் பிரதிகளை உற்பத்தி செய்வதும் கூட நூலகத்தின் பணியாக இருக்க முடியும்.